Saturday, 19 May 2018

பேட்டராய ஸ்வாமி எனக்கு ஒரு தெய்வமல்ல. ....!!!!!



பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் , கோலம் செய்
துங்க கரிமுகத்து தூமணியே , நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா. 



வருடம் 1998 . நான் ஜூலை மாதம் SONATA என்ற நிறுவனத்தில் புதிதாக பணிக்கு சேர்திருந்தேன். எனக்கு என்றுமே பல கோயில்களுக்கு, அதுவும் , பழமையான கோயில்களுக்கு செல்வது என்றால் வெல்லக்கட்டி.  என்னுடைய மேல் அதிகாரியும் மற்றும் நண்பரான திரு Y  K  ஸ்ரீராம் அவர்கள்  என்னை டேன்கனிக்கோட்டை என்ற தலத்தில் உள்ள ஒரு புராதனமான வெங்கடாசலபதி கோயிலுக்கு போகுமாறு கூறினார். தான் சிறுவயதில் அந்த ஊரில் படித்ததாகவும் அவரின் தந்தை அங்கு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றயதாகவும் கூறினார். 

சுமாராக செப்டம்பர் மாதம் இருக்கலாம். நான், என் மகள் மற்றும் மனைவி ஆகியோருடன் நான் ஒரு சனிக்கிழமை அன்று டென்கனிகோட்டைக்கு என்னுடைய புதிய மாருதி காரில் பயணித்தேன்.ஓசூருக்கு அப்பால் மிகவும் மோசமான பாதை. ஒரு கார் செல்வதற்கே தடுமாற்றம். அவ்வப்போது சில குடிசைகள் தென்பட்டன. புதிய காரை இவ்வாறு கொண்டு போவதை நினைத்து மனம் அழுதது,ஒரு வழியாக சுமார் ஒரு 12  மணிக்கு அந்த கோயிலை அடைந்திருப்போம்.அது ஒரு மிகவும் பழமையான கோயிலதான். கேட்பாரற்று இருந்தது. ஏதோ சில பூஜைகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. மிகவும் அழகான ஸ்வாமி. பார்த்தவுடன் ஒரு இனம்புரியாத வசீகரம். குபேரனிடம் கடன் வாங்கிய வேங்கடவன் இந்த ஏழை கோலத்தில் காட்சி அளிக்க வேண்டுமா என்ற ஒரு ஆதங்கம்.ஏனோ தானோ என்று பூஜை செய்யும் பூஜாரி ஒருபக்கம், அச்சுறுத்தும் வௌவால்கள் , சீர் செய்யப்படாத சிலைகள், விளக்குகள், பொங்கி வழியும் குப்பை மேடு. அன்று கிளம்பும் போது, சரி, YKS  க்கு வேண்டி கோயில் பார்த்தாகிவிட்டது. இனிமேல், இந்த குண்டும் குழியுமான சாலையில் , பெங்களூரு வில் இருந்து 65 கிம் தொலைவில் உள்ள இந்த கோயிலுக்கு யார் வரப்போகிறார்கள் என்று எண்ணி கொண்டுதான் அங்கிருந்து கிளம்பினோம். அன்று எனக்கு நிச்சயமாக தெரியாது, அதாவது, நான் மற்றும் என் குடும்பம் ஒரு ஆகர்ஷண சக்தியின் பிடியில் அன்பு பிணைப்பு கொண்டு விட்டோம் என்பது.

சில மாதங்கள் கழித்து அங்கு மீண்டும் சென்றோம் . கோயில் மாறவில்லை. யாரோ பக்தர்கள் திருமஞ்சனம் ஒன்று நிகழ்த்தினார்கள். ஸ்வாமிக்கு அன்று கொஞ்சம் வயிறு நிரம்பியிருக்கலாம். பாவம்.எனக்கும் ஸ்வாமிக்கு திருமஞ்சனம் நடத்த வேண்டும் என்ற ஒரு உந்துதல். என்னுடைய  நண்பர்களையும் அழைத்துக்கொண்டு திருமஞ்சன விழாவை நன்றாக நடத்தினேன். விரைவில் எனக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அடுத்த ௨ வருடங்கள் அவரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அந்த திருமஞ்சனத்திற்கு வந்திருந்த பலரும், என்னையும் சேர்த்து, வெகு விரைவில் அமெரிக்கா அல்லது வெளிநாடு சென்றனர். பேட்ராயரை முதன் முதலாக  நான் திரும்பி பார்க்க வைத்த சம்பவம் அது.



கடைசியில் நான் பெங்களூர் திரும்பினேன். மறுபடியும் பேட்ராயருடன் உறவு புதுப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் திரு கண்ணன் அவர்கள் பெரிய பட்டராக பொறுப்பேற்றிருந்தார் .இறைவன் இப்பொழுது ஜொலிக்க ஆரம்பித்திருந்தார். ஒழுங்கான பூஜைகள் , கட்டுப்பாடு, கண்டிப்பு ஆகியவை தோன்றின. கோயில் செல்வது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவமாக மாறியது.புதிய கார் (ஹோண்டா சிட்டி) மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாதை. மேலும் ஒன்று அல்லது இரண்டு திருமஞ்சனம் நடத்த வாய்ப்பும் கிடைத்தது. 



சாதாரணமாக , அருகில் இருக்கும் ஒரு கோயிலுக்கு செல்வதற்கு நாம் முன்னேற்பாடு எதுவும் செய்வதில்லை. தோன்றினால் ( வேறு ஒரு வேலையும் இல்லாவிட்டால் !!) , உடனடியாக கோவிலுக்கு கிளம்பிவிடுவோம். சென்ற இடத்தில ஒரு அர்ச்சனையை முடித்து விட்டு  உடனடியாக வேறு எங்காவது பொழுதுபோக்கிற்கு சென்று விடுவது என்பது எல்லாருடைய வழக்கம்.பேட்ராய சுவாமி சொல்லிக்கொடுத்த முதல் பாடம்  அதுதான். அவர் மனது வைக்காமல் அவர் கோயிலுக்கு செல்ல இயலாது. ஒரு முறை , என்னுடைய கார் முதன் முறையாக பில்கஹள்ளியில் puncture ஆகியது. சீர் செய்து கொண்டு விரைந்தேன். அத்திப்பள்ளியில் அடுத்த puncture .வீடு திரும்பவேண்டியதாயிற்று. அதன் பின் நாம் நாளை கோயில் போகலாம் என்று சொல்வதில்லை. "ஐயா , நான் உங்கள் கோயிலுக்கு நாளை வருவதாய் இருக்கிறேன் , அனுமதியுடன் வர விரும்புகிறேன்" என்றுதான் என் விண்ணப்பம்  இருக்கும்.அவர் எனக்கு சொல்லிக்கொடுத்த இரண்டாவது பாடம்- கோயிலுக்கு சென்று விட்டால் இத்தனை மணிக்கு திரும்ப வேண்டும் என்று கணக்கு வைத்து கொள்ளாதே என்பது, பல நாட்களில் காலை பொய் மதியம் வந்துவிடலாம் என்று நினைத்தால் அன்று அவர் என்னை மாலை வரைக்கும் அங்கு உட்கார வைத்துவிடுவார். ஆதலால், அவரை பார்க்க செல்லும் பொழுது வேறு எந்த கட்டாயத்தையும் வைத்து கொள்ளாதே. இங்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ஒரு நாள் கூட எங்களை அவர் பட்டினிக்கு ஆக்கியதில்லை. வயிறு நிறைய அமிர்தமான உணவு என்றும் உண்டு.



வருடம் 2011 . நான் புதிய கார் - ஹோண்டா accord வாங்கினேன். பெங்களுருவில் வழக்கத்தின் படி காரை ஒட்டி கொண்டு கஸ்துரிபா சாலையில் உள்ள கணபதி கோயிலுக்கு  சென்றேன். கோயில் மூடி விட்டார்கள். வருத்தம்தான், பல்கலை கழகத்தில் பனி புரிந்து கொண்டிருந்த என் மனைவியை அழைத்து கொண்டு வீடு திரும்பிவிட்டேன். அதன் பிறகு அந்த பிள்ளையார் கோயில் செல்ல எவ்வளவு முயற்சித்தும் என்னால் செல்ல முடியவில்லை. பேட்ராய ஸ்வாமியின் எண்ணம் நன்றாகவே புரிந்தது. காரை எடுத்து கொண்டு தேன்கனிக்கோட்டை சென்றேன். வேணு மாமா பூஜை செய்த பிறகுதான் , எனக்கு அந்த காரை கஸ்தூரிபா பிள்ளையாரிடம் எடுத்து செல்ல முடிந்தது. 

நான் என்னையுமறியாமல் அவரை மேன் மேலும் நெருங்கினேன். என் உடைகள் மாறின, பாண்ட் சர்ட் அணிந்தவன் வேட்டிக்கு மாறினேன், அங்கவஸ்திரம் தரித்தேன். அவரை காண செல்வது என்றால் அந்த ஞாயிற்று கிழமை முழுவதும் அவருக்கு அர்பணித்தேன். மாதம் ஒரு முறையாவது வருவதாகி வழக்கப்படுத்தி கொண்டேன். சாத்துமுறை என்பது உணவிற்கும் நமக்கும் இடைவெளி கொடுக்கின்ற மந்திரம் என்ற நிலை பொய் நானும் மறை ஓதுகின்றவர்களில் ஒருவனானேன்  ஸ்வாமிக்கு வருடம் ஒருமுறை விதம் விதமாக உடைகள் வாங்கி கொடுத்து பூரித்தேன்.


என் மனைவி மற்றும் மகள் - முக்கியமாக என் மகள்( இளைய தலைமுறை- ஊருக்குள்ளே இருக்கும் கோயிலுக்கு போக தயங்குகிறவர்கள் )  ஆகிய இருவரும் பேட்ராயரை மிகவும் பக்தியுடன் வழிபட்டார்கள். நான் எப்பொழுது கோயிலுக்கு சென்றாலும் அவர்களும் உண்டு. திரு கண்ணன் பட்டர் அவர்கள் எங்கள் பேரை மறந்தாலும், "பகவதி ராஜேஸ்வரி -உத்திரம் " என் மகளை - மறந்தது கிடையாது.




என் மகள் பள்ளியில் படிக்கும் பொழுது , படிப்பில் சேர்த்தி கிடையாது. மதிப்பெண்கள் பெறுவது சிரமமாகத்தான் இருந்தது. இறுதியில் பேட்டராயரின் காலில் நெடுசாண்கிடையாக விழுந்தோம்.  பத்தாவது மற்றும் பன்னிரண்டு வகுப்புகளில் அவள் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றது " Petaraya consortium " மூலமாகத்தான் என்று இன்றும் வேடிக்கையையாக குறிப்பிடுவது உண்டு. இரவும் பகலுமாக நாங்கள் ஏற்றிய நந்தா விளக்கிற்கு அவர் நிச்சயமான பலனை அளித்தார்.


நான் அவரிடம் மடிப்பிச்சை கேட்ட தருணம் உண்டு. சிங்கப்பூர் நகரில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டிய தருணம். நான் மிகவும் கஷ்டப்பட்டு செய்த வேலையின் முடிவு அன்று.தொழில் விரோதம் காரணமாக என்னுடைய உழைப்பு முடங்கி போகும் அபாயம். அங்கிருந்து என் சுவாமியிடம் மடிப்பிச்சை கேட்டேன், என்னை காப்பாற்ற வேண்டும் என்று. எனக்கு அவர் பிச்சை கொடுத்தார். என் உழைப்பு ஒப்புக்கொள்ள பட்டது. இரவு சுமார் 11 மணிக்கு பெங்களூர் இல் வந்து இறங்கிய நான் அடுத்த நாள் காலையில் நேராக அவர் சந்நிதியில் சென்று விழுந்தேன். என் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய தருணம். நான் சுவாமியிடம் அவ்வளவாக எதையும் வேண்டுவதில்லை. கட்டாய தேவை என்று ஒன்று வந்துவிட்டால் என்னிடம் வந்து விடு என்று அவர் சொன்ன பாடமாகவே நான் அதை எடுத்து கொண்டுள்ளேன்.



நான் அவரிடம் வெகுண்ட தருணமும் உண்டு. என் மகள் கிறிஸ்து கல்லூரியில் படிப்பை முடித்து விட்டால்- முடிவுகளை பார்த்ததும் அனைவருக்கும் அதிர்ச்சி. ஒரு பாடத்தில் அவள் தோற்றிருந்தாள். அவள் எதிர் பார்க்காத முடிவு. எதிர்கால கனவுகளை சீர்குலைக்கும் நிலை. எனக்கு நிச்சயமாக தெரியும் அவள் தோற்றிருக்க மாட்டாள் என்பது. நான் அன்று என் சுவாமியுடன் கோபம் கொண்டேன். "பல ஆண்டுகளாக மாதம் மாதம் உன்னை காண வந்திருக்கின்றேன், கடைசியில் என் மகளுக்கு நீ கொடுப்பது இதுதானா, நான் உன்னை காண்பதை நிறுத்த போவதில்லை, ஆனால், உன் பக்தன் உன்னிடம் கோபம் கொண்டிருக்கின்றான் என்பதை நினைவுகொள் ". என் நியாயம் அவருக்கு புரிந்திருக்க வேண்டும். கல்லூரி உடனடியாக அந்தத் பாடத்தை மறு பரிசீலனை செய்து வெற்றி பெற செய்தார்கள். நான் எவ்வளவு எழுதினாலும் என் மனா ஓட்டங்களை சொல்ல இயலாது. அன்று நிச்சயமாக ஸ்வாமி என் அருகில் நிற்பதை உணர்ந்தேன் .



அவர் செய்யும் குறும்புகளுக்கும் குறைவில்லை. இவரை பார்த்துவிட்டு நான் வேறு ஒரு கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தால் ஏதாவது ஒரு தடையை உருவாக்கி அதை நிறுத்தி விட வேண்டியது. அதுவும் சிவன் கோயிலுக்கு செல்வதன்றால் கேட்கவே வேண்டாம். சிவனை மறந்து விடலாம்.அசுரனை கொன்ற ஒரு வீரனாக அவர் காட்சிஅளிக்கலாம். ஆனால் அடித்தளத்தில அவர் கண்ணன் தான் ,அதில் எந்த சந்தேகமும் இல்லை.



காலங்கள் உருண்டோடி விட்டன கடந்த 20 ஆண்டுகளாக பேட்ராயர் எங்கள் வாழ்க்கையில ஒரு இன்றிமையாதவர் ஆகிவிட்டார். அவர் துணை இன்றி நாங்கள் எந்த முடிவும் எடுப்பதில்லை. 



இன்று  நான் அந்த கோயிலில் ஒரு அங்கம். அந்த ஊரினர் என்னையும்  அவர்களில் ஒருவராக மதிக்கின்றனர். கோயிலில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எனக்கு முன்னின்று சென்று இறைவன் அருகில் நிற்கும் ஒரு வரவேற்பு உண்டு. நான் மறைந்து நின்று கொண்டாலும் திரு குட்டி அவர்கள் என்னை கண்டுபிடித்து கூப்பிட்டு விடுவார். பேட்ராயரின் திருவருள் இல்லையென்றால் எனக்கு இது நிச்சயமாக கிடைத்திருக்காது. அவரின் அன்புக்கு அடிமையாக்கி என் வாழ்க்கை பாதையை மாற்றியவர் அவர்தான். இன்று நான் 92 திவ்ய தேசங்களை தரிசித்து விட்டேன். என்னை தரிசிக்க வித்திட்டவர் அவர்தான், மீதமுள்ள திவ்ய தேசங்களை தரிசிக்க வைக்க போகிறவரும் அவர்தான். கடல் அருகில் என் இறுதி நாட்களை கழிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவனை ஓசூரில் நிலம் வாங்க வைத்தவரும் அவர்தான். 



எங்கள் வாழ்க்கையில் ஒரு கண்டிக்கும் தந்தையாக, அன்பு பாராட்டும் தாயாக, உடுக்கை இழந்த கை போல ஒரு நண்பனாக, எங்கள் கண்ணீரை துடைக்கும் தலைவனாக , நல்லாசிரியனாக , ஒரு குறும்பு செய்யும் பாலகனாக ..........இவ்வாறு பேட்டராயணனின் பலவித பரிமாணங்கள். இப்போது சொல்லுங்கள், அவரை நான் எவ்வாறு தெய்வம் என்று அழைப்பேன் ?  


படிக்காத மேதை என்ற திரைப்படத்தில் வரும் ஒரு பாட்டுதான் ஞாபகத்திற்கு வருகின்றது. அதை எனற்கேப்ப மாற்றி அமைத்துள்ளேன். ( பாரதியார்  மன்னிப்பாராக !!)



ங்கிருந்தோ அழைத்தான் , (அவன்) என்னை ஆட்கொண்டான்'
ங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் ,
பேட்டராயன், எங்கிருந்தோ அழைத்தான். 

ண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் 
குடும்பம் வண்ணமுற காக்கின்றான்.
குறிஅறிந்து நடப்பான், தேவைதனை கொடுப்பான், பேட்டராயனால் பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாதது.

நண்பனாய் , மந்திரியாய் , நல்லாசிரியனுமாய் , பண்பிலே 

தெய்வமாய் , பார்வையிலே குறும்புள்ள பாலகனாய் 
பற்று மிகுந்து வர பார்க்கின்றேன், 
இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்..... 

பேட்ராய சுவாமி , நண்பா, தந்தையே, தாயே, என் வாழ்வே . உன் திருவடி சரணம். 

வேண்டுவதெல்லாம் ஒன்றுதான் பகவானே !!. உன்னை என்றென்றும் கண்டு கொண்டிருக்க வேண்டும், 


No comments:

Post a Comment